இறுதி நபி முகம்மது நபியே ஆவார். அவருக்கு பின் ஷரீஅத் இல்லாத நபியும் இல்லை

 முகம்மது நபியே கடைசி நபி- அவருக்கு பின் எந்த நபியுமில்லை! (1)



1.நானே காதமுன்நபிய்யீன். எனக்கு பிறகு நபி கிடையாது

என் உம்மத்தில் 30 பொய்யர்கள் தோன்றி தம்மை நபி என்று வாதிடுவார்கள். நானே நபிமார்களின் முத்திரை (காதமுன்நபிய்யீன்). எனக்கு பிறகு நபி இல்லை (திர்மிதீ 2219)

அதாவது தனக்கு பின்னால் எவரும் புதிதாக நுபுவ்வத் பெற்று வரமாட்டார். நானே கடைசி நபி என தெளிவாக்கியுள்ளார்கள். (ஆனால் ஈஸா நபி அவர்கள் முன்பே நுபுவ்வத் பெற்றவர். அது நபிகளாருக்கு பிறகு பெறும் நுபுவ்வத்தோ நபிகளாருக்கு பின் நபியாவதோ அல்ல!). இங்கே காதமுன்நபிய்யீன் என்பதன் விளக்கமே எனக்கு பின் நபி இல்லை என்பதை நபிகளார் விளக்கியுள்ளார்கள்.

2.நுபுவ்வத்தும் ரிஸாலத்தும் முடிந்து விட்டது.-இனிமேல் புதிதாக நுபுவ்வல்தோ ரிஸாலத்தோ பெற முடியாது

ரிசாலத்தும் நுபுவ்வத்தும் முடிந்துவிட்டது. எனக்கு பிறகு ரசூலும் இல்லை. நபியும் இல்லை... ஆயினும் முபஷ்ஷிராத் உண்டு. முபஷ்ஷிராத் என்றால் முஸ்லிம் காணும் கனவுகள். அது நுபுவ்த்தின் பகுதிகளில் ஒருபகுதியாகும். (திர்மிதீ 2272)

நுபுவ்வத்தில் முஷ்ஷிராத்தை தவிர வேறு எதுவும் மீதமில்லை. முப்ஷ்ஷிராத் என்றால் நல்ல கனவு (புகாரி 6990)

மனிதர்களே! நுபுவ்வத்தின் நற்செய்திகளிலிருந்து , ஒரு ஸாலிஹான அடியார் காணும் அல்லலு அவருக்காக காணப்படும் நல்ல கனவை தவிர வேறு எதுவும் மீதமில்லை (முஸ்லிம் 824-825 (479a,479b), நஸாயீ 1120,1045, அபூதாவூத் 876,இப்னுமாஜா 3899, முஸ்னத் அஹ்மத் 1899/1900)

இதன்படி புதிதாக எவரும் நுபுவ்வத் பெற்று நபியாக மாட்டார். ரிசாலத் பெற்று ரசூல் ஆக மாட்டார். ஆனால் ஈஸா நபியோ முன்பே நுபுவ்வத் ரிசாலத் பெற்றவர்.  அவர் வருவதால் இது பாதிப்படையாது. காரணம் நபிகளாருக்கு பிறகு அவர் அதை பெறவில்லை! பூமிக்கு வந்து இந்த உம்மத்திலிருந்தே மக்களை வழிநடத்துவார்(முஸ்லிம் 246 (155f) & 247 (156).  நுபுவ்வத்தின் பகுதியில் எஞ்சியிருப்பது முஸ்லிமின் கனவுகள் மட்டுமே!

3.நபிமார்கள் எனும் கட்டிடத்தின் கடைசியான கல் நபிகளாரே ஆவார்.

எனது நிலையும் இறைத்தூதர்களின் நிலையும் ஒரு வீட்டைக்கட்டி , அதை அழகாக அலங்கரித்து , ஒரு மூலையில் ஒரு கல் அளவிற்கு இடத்தை விட்டுவிட்ட ஒரு மனிதரின் நிலை போன்றதாகும். மக்கள் அதை சுற்றிப்பார்த்துவிட்டு ஆச்சரியமடைந்து ,"இந்த கல் வைக்கப்பட்டிருக்க கூடாதா?" என்று கேட்கலானார்கள். நான் தான் அந்த கல். நானே நபியார்களின் கடைசியானவர் (ஃகாதிமுன்நபிய்யீன்) ஆவேன். (புகாரி 3535)

இங்கே ஈஸா நபி உட்பட எல்லா நபிமார்களும் வைக்கப்பட்டிருந்தும் முகம்மது நபி இல்லாமல் அழகும் அலங்காரமும் பூரணப்பட்டிருக்கவில்லை. பூரணப்படுத்துவதற்கு இருந்த ஒரே கல் நபிகளார் என்பதோடு அவரே கடைசி நபி என்பதையும் தெளிவுபடுத்தியுள்ளார்கள்.

அந்த கட்டிடத்தில் ஷரீஅத் உள்ள நபி சரீஅத் இல்லாத நபி என்று எதுவுமில்லை.. எஞ்சியிருந்தது முகம்மது நபியின் நுபுவ்வத் மட்டுமே..

 

 

முகம்மது நபியே கடைசி நபி- அவருக்கு பின் எந்த நபியுமில்லை! (2)

4.அலீ அலைஹிஸ்ஸலாம் அவர்கள் நபிகளாருக்கு மூஸா அலைஹிஸ்ஸலாமிற்கு ஹாரூன் அலைஹிஸ்ஸலாம் இருந்தது போன்று உறுதுணையானவர். ஆனால்?

"அலீயே! மூஸாவிடம் ஹாரூனுக்கு இருந்த அந்தஸ்த்தில் என்னிடம் நீங்கள் இருப்பதை விரும்பவில்லையா? ஆயினும் எனக்கு பின் நபி இல்லை" (முஸ்லிம் 4776,4777 (2404a,2404b))

ஹாரூன் நபி மூஸா நபியின் சரீஅத்தில் உதவியாளர். இவ்வாறு தனக்கு பின் தன் ஷரீஅத்தில் உதவியாளரான நபி வருவார் என்று யாரும் கருதாதபடிக்கு , தனக்கு பின் நபி இல்லை என்றும் வேறொரு அறிவிப்பில் தனக்கு பிறகு நுபுவ்வத் இல்லை (முஸ்லிம் 4778 (2404d)) என்றும் தெளிவாக்கியுள்ளார்கள். ஆனால் ஈஸா நபியோ நபிகளாருக்கு முன்புள்ள நபியும் முன்பே நுபுவ்வத் பெற்றவரும் ஆவார். அவர் வருவதால் மட்டுமே இது பாதிக்கப்படாமல் பாதுகாக்கபபடும். அவரை தவிர வேறொருவர் வந்தால் உவமை ஈஸாவாக இருந்தாலும் இது பொய்யாக்கப்படும்.

5.பனூஇஸ்ராயீலில் நபிமார்கள் தொடர்ச்சி இருந்தது. ஆனால் தனக்கு பின்போ அவ்வாறு இருக்காது.

"பனூஇஸ்ராயீலை (இஸ்ராயீலின்பிள்ளைகளை) நிர்வகிப்போராக நபிமார்கள் இருந்தனர். ஒரு நபி மரணித்த போதெல்லாம்  மற்றொரு நபி அவரைத்தொடர்ந்து (கலீஃபாவாக) வந்தார். எனக்கு பின்னால் நபி இல்லை. கலீஃபாக்கள் தோன்றுவார்கள். " (புகாரி 3455)

 

குறிப்பாக பனூ இஸ்ராயீலில் மூஸா நபியை தவிர்த்து மற்ற அனைத்து நபிமார்களும் மூஸா நபியின் ஷரீஅத் படி நடந்தவர்களே ஆவர். இதனால் ஷரீஅத் இல்லாத நபிமார் கூட தனக்கு பின் இருக்கமாட்டார்கள் என்பதையே நபிகளார் கூறுகிறார்கள்.

அத்தோடு இஸ்ரவேலரில் ஒரு நபியின் கலீஃபாவாக (அவரது பிரதிநிதி-அவரது இடத்திற்கு வருபவர்) இன்னொரு நபியாக இருந்தார். ஆனால் எனக்கு பின்பு நபி இல்லை. நபியில்லாத கலீஃபாவாக தான் இருப்பார்கள் என துல்லியமாக முன்னறிவித்தார்கள்.

அதனால் எவரும் தன்னை ஷரீஅத் இல்லாத நபி என உருட்டி நபித்துவ வாதம் வைக்க முடியாது. ஆனால் ஈஸா நபியோ நபிகளாருக்கு முன்புள்ள நபி என்பதால், அவர் நபிகளாரின் சரீஅத்படி தீர்ப்பளிக்க (முஸ்லிம் 246-247 (155f-156) வரும்போது இது மீறப்படுவதில்லை!

 

 

முகம்மது நபியே கடைசி நபி- அவருக்கு பின் எந்த நபியுமில்லை! (3)

6.நபிமார்கள் முகம்மது நபி மூலம் முத்திரையிடப்பட்டுவிட்டனர்

மற்ற நபிமார்களைவிட நான் ஆறு விடயங்களால் சிறப்பிக்கப்பட்டுள்ளேன். 5வது:நான் அனைத்து படைப்பாருக்கும் (மனித&ஜின்) அனுப்பப்பட்டுள்ளேன். 6வது: என்மூலம் நபிமார்கள் முத்திரையிடப்பட்டுவிட்டனர். (முஸ்லிம் 907 (523))

ஒன்று பூரணமாக முடிந்து விடும்போதே இனிமேல் யாரும் புதிதாக வராதபடி முத்திரையிடப்படும்.. இதன்படி எவரும் புதிதாக நுபுவ்வத் பெற முடியாது. ஆனால் ஈஸா நபியோ ஏற்கனவே நபியாக இருப்பதால் அவரது வருகையால் பாதிப்பில்லை!

7.நான் அல்ஆகிப் (இறுதியானவன்) ஆவேன்

நான் முகம்மது ஆவேன். நான் அஹ்மது ஆவேன். நான் அல்மாஹீ (அழிப்பவர்) ஆவேன். என் மூலமாக அல்லாஹ் குஃப்ரை அழிக்கிறான். நான் அல்ஹாசிர் (ஒன்றுதிரட்டுபவர்) ஆவேன். என்காலுக்குகீழே மனிதர்கள் ஒன்றுதிரட்டப்படுவார்கள். நான் அல்ஆகிப் ஆவேன் (புகாரி 4896)

அல்ஆகிப் என்றால் என்றால் அவருக்கு பின் நபியில்லாதவர் (முஸ்லிம் 4696 (2354a)

அதாவது நான் அல்ஆகிப் ஆவேன். தனக்கு பின் நபி இல்லை (முஸ்லிம் 4697 ( 2354b), திர்மிதீ 2840)

இதன்மூலம் புதிதாக நுபுவ்வத் பெற்று எவரும் வரமுடியாது. ஆனால் ஈஸா நபியோ அவருக்கு முந்திய நபியாக இருப்பதால் அவர் வருவதால் அவருக்கு பின்னாலுள்ள நபியாக ஆகமாட்டார்

8.நானே நபிமார்களின் இறுதியானவர்.

"நான் நபிமார்களின் இறுதியானவர் (آخر الأنبياء).  எனது பள்ளிவாசல் பள்ளிவாசல்களில் இறுதியானதாகும் (முஸ்லிம் 2694 (1394c), நஸாயீ 694)

நபிமார்களில் இறுதியானவர் முகம்மது நபியாவார். நபிமார்களின் பள்ளிவாசல்களில் (கஃபா,மஸ்ஜிதுல்அக்ஸா,  மஸ்ஜிதுந்நபவீ) இறுதியானது நபிகளாரின் பள்ளிவாசல் (மஸ்ஜிதுந்நபவீ)  ஆகும். இதன்படி ஈஸா நபி புதிதாக பள்ளிவாசல் அமைக்க மாட்டார். ஆனால் தன்னை நபியாக வாதிட்டவர்கள் தமக்கென பள்ளிவாசல் கட்டியுள்ளார்கள்.

 

 

முகம்மது நபியே கடைசி நபி- அவருக்கு பின் எந்த நபியுமில்லை! (4)

ஷரீஅத் நபி ஷரீஅத் இல்லாத நபி என்ற வாதத்தின் தொடக்கத்திற்கான காரணம் ஈஸா நபியின் வருகையும் இறுதிநபித்துவமும் தான்

குர்ஆன் 33:40 நபிகளாரை நபிமார்களின் முத்திரை என்று சொன்னதாலும் நபிகளார் தன்னை கடைசி நபி என்றும் தனக்கு பின் நபி இல்லை என்று சொன்னதாலும் ஈஸா நபியின் வருகையை சில வழிகேடர்கள் (முஃதஸிலா&ஜஹ்மிய்யா) மறுத்தார்கள். ஆனால் நபிகளாருக்கு பிறகு கடைசி காலத்தில் ஈஸா நபி வருவார் என்றும் தஜ்ஜாலை கொல்வார் என்றும் 29+ ஹதீஸ்கள் வந்துள்ளதால் அறிஞர்கள் சில விளக்கங்களை கொடுக்க வேண்டி ஏற்பட்டது. அதிலே சிலர் கொடுத்த விளக்கங்கள்

1.ஈஸா நபியின் நுபுவ்வத்தை அல்லாஹ் பறித்துவிட்டு நபியல்லாதவாறு அனுப்புவான் என சிலர் கூறினர்-

இது மிகவும் பலவீனமான இழிவான வெறுக்கத்தக்க விளக்கமாகும். ஏனெனில் ஈஸா நபியின் இரண்டாம் வருகையில் நபிகளார் (ஸல்) அவர்கள் குறிப்பிடும் ஹதீஸில் "அல்லாஹ்வின் நபி ஈஸாவும் அவரது தோழர்களும்" என்று முஸ்லிம் 5629 (2937a) இலே  நான்கு தடவை கூறப்பட்டுள்ளது.

2.நபிகளாருக்கு பின் நபியில்லை என்றால் நபியின் ஷரீஅத்தை மாற்றக்கூடிய நபி வரமாட்டார் என சிலர் கூறினர்.

இது ஓரளவு சரியாக இருந்தாலும் பலவீனமான தவறும் இதில் உள்ளது.  ஈஸா நபி முகம்மது ஸல்லல்லாஹுஅலைஹிவஸல்லம் அவர்களின் ஷரீஅத்படி தீர்ப்பளிப்பார்கள் என்பது உண்மையே. ஆனால் இந்த விளக்கத்தால் பொய்யர்களும் தம்மை ஷரீஅத் இல்லாத நபி என வாதிட வழிதிறப்பதாக அமையும்.

அத்தோடு நபிகளாரும் இஸ்ரவேலரை நிர்வகிப்போர் நபிமார்களாக இருந்தனர் எனும் ஹதீஸிலே ஷரீஅத் இல்லாத புது நபியும் இருக்காது என்பதை தெளிவாக்கியுள்ளார்கள். (பார்க்க புகாரி 3455) .ஏனெனில் இஸ்ரவேலரை நிர்வகித்த நபிமார்கள் மூஸா நபியின் ஷரீஅத்படியே தீர்ப்பளித்தவர்களாவர். அதாவது சரீஅத் இல்லாத நபிமார்களாவர். அத்தகையோரும் இருக்கமாட்டார் என்பதே முகம்மது (ஸல்லல்லாஹுஅலைஹிவஸல்லம்) அவர்களின் விளக்கம்.

3.ஈஸா நபி அல்லாத ஒருவர் ஈஸாநபியின் பண்புகளையும் தன்மைகளையும் உடையவராக வருதல் என்று அறிவீனமாக சிலர் கூறினர்.

இது முதலாம் கருத்தை விட இழிவான கேவலமான கருத்தாகும். அதாவது வருபவர் நபி அல்லாதிருப்பார் என்று காட்டுவதற்காக இப்படி கூறுபவர்கள் முஸ்லிம் 5629 (2937a) ஹதீஸிலே நபிகளார் ஈஸாவை அல்லாஹ்வின் நபி என்று கூறியுள்ளாரகள். அதனால் புதிதாக ஒருவர் நபியாக வந்தால் , நபிகளாருக்கு பின் நுபுவ்வத் பெறும் புது நபியாகி நபிகளார் கூறிய "எனக்கு பின் நபியில்லை" என்பதை மறுப்பதாக அமையும்.

(அகமதிகளின் " இப்னு அபீகப்சா"  கதையும் இவ்வாறே  அமைகிறது. அப்படி வேறொரு ஈஸா எனில் அது எனக்கு பின் நபியில்லை எனும் ஸஹீஹான ஹதீஸுக்கு முரணேயாகும்.)

4.ஈஸா நபி அவர்கள் முகம்மது நபியிற்கு முன்பே நுபுவ்வத் பெற்றவர். அவர் நபிகளாருக்கு பின்பு மீண்டும் வந்தாலும் அவர் நபிகளாருக்கு பின்னுள்ள நபியாக மாட்டார். ஆயுள் நீடிக்கப்பட்ட நபியாகவே இருப்பார். அத்தோடு இந்த உம்மத்தை சேர்ந்து நபிகளாரின் ஷரீஅத்திற்கு கட்டுப்பட்டு இந்த உம்மத்தின் இமாமை பின்பற்றி தொழுபவராக இருப்பார் (பார்க்க முஸ்லிம் 247 (156), 246 (155f)).

இதுவே ஸஹீஹான ஹதீஸ்களுடன் பொருந்திப்போகும் விளக்கமாகும். மற்றையவை பலவீனமான விளக்கங்களாகவும் ஆழமாக பார்க்கும்போது ஹதீஸுக்கு முரண்படுவதாகவும் வேறு சில இஸ்லாமிய அடிப்படைக்கே முரணாகவும் உள்ளன. (இதற்கு ஓர் உதாரணம்: இரண்டு சகோதரர்கள் (முகம்மது நபி,ஈஸா நபி) இருக்கிறார்கள். இளையவர் தன் பொறுப்பை பூரணப்படுத்திய பின் உலகப்பிரகாரமாக  மரணித்துவிட்டார். மூத்தவரோ ஆயுள் நீடிக்கப்பட்டு , பிற்காலத்தில் தன் இளைய சகோதரரின் வழியில் வாழ்ந்து மரணிப்பார் (அபூதாவூத் 4324). இதனால் மூத்தவர் தன்  இளையவருக்கு பின்பு தோன்றியவராக இருக்கமாட்டார் அல்லவா? )


Comments

Popular posts from this blog

இறுதி நபித்துவம் பற்றி இஸ்லாமிய இஜ்மாவும் காதமுன்நபிய்யின் பற்றி அரபு அகராதிகளும்

இமாம் அல்-மஹ்தியும் போலிகளும்

நபிகளாரின் மகன் இப்ராஹீம் பற்றிய அறிவிப்பில் காதியானி பித்தலாட்டம்.